ரிஷப ராசி அன்பர்களே. உங்களுடைய ராசிக்கு இதுநாள்வரை பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான், இப்போது ஜீவன ஸ்தானத்திற்கு வருகிறார். 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதி பத்தாம் இடத்திற்கு வருகிறார். 11-ஆம் இடத்திற்கு 12-ஆம் இடத்தில் வருகிறார். இதுநாள் வரை நீங்கள் பெற்றுக் கொண்டிருந்த லாப ஆதாய விஷயங்களில் இனி, மிக கவனமாக இருப்பது நல்லது. எனினும் 10-ஆம் இடம் ஜீவன ஸ்தானம் என்பதனால், உங்களுடைய உழைப்பின் மூலமாக, கடமைகளைச் செய்வதன் மூலமாக, உத்தியோகத்தின் மூலமாக நீங்கள் பொருளை ஈட்டுவீர்கள்.
கடமையையே கண்ணாக நினைக்க வேண்டிய காலம் இது. செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்க வேண்டிய ஒரு பெயர்ச்சியாக இந்த குருபெயர்ச்சி இருக்கிறது. உங்களுடைய எந்த ஒரு கடமையிலிருந்தும் நீங்கள் பின்வாங்கக் கூடாது. செய்ய வேண்டிய கடமையை, பிறரை செய்யச் சொல்லவோ, தள்ளி வைக்கவோ, விட்டு விடவோ கூடாது.
குரு பகவான் உங்களுக்கு அஷ்டமாதிபதி ஆகவும் இருக்கிறார். 8-க்குடையவர் 10-ஆம் இடத்திற்கு வருகிறார். அதனால் உங்களுடைய கடமைகளை செய்வதற்கு அதிக கடன் வாங்குவது, கடமைகள் சம்பந்தமான முடிவுகளை எடுப்பதில் அவசரப்படுவது, இவற்றை தவிர்க்க வேண்டும். உதாரணமாக உங்களுடைய பிள்ளைகளின் உயர்கல்வி என்று பார்க்கும் போது அவர்களுக்கு அதிலே விருப்பம் இருக்கிறதா? அந்த கல்விக்கு எதிர்காலம் இருக்கிறதா? இப்படிப்பட்ட விஷயங்களை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுடைய திருமணம் என்று வரும்போது அவர்களுக்கு பொருந்துகின்ற வரனா? அந்த குடும்பத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் பொருந்துமா? இப்படியாக அனைத்து விஷயத்தையும் மிகச் சரியாக கவனித்து, அதன் பிறகு நீங்கள் திருமண ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
உங்களுடைய உத்தியோக ரீதியாக, உடன் பணியாற்றிய கூடியவர்கள் அல்லது உயரதிகாரி முதலாளி இவர்களிடத்திலே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பணி நேரத்தில் வேலை சம்பந்தமான விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும்.
திடீரென்று வேலையை விட்டுவிடுவது, வேறு வேலைக்கு மாறுவதற்காக அவசரப்படுவது, பெரிய திட்டமிடுதல் இல்லாமல் சுய தொழில் வியாபாரம் தொடங்குவது, சக்திக்கு மீறிய கடன்களை வாங்குவது, வெளிநாட்டு வேலைகளில் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் அவசரப்பட்டு சென்று சேர்ந்து விடுவது, அதற்காக பொருளை பிறரிடத்தில் கொடுத்து முயற்சிப்பது இப்படியான விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
சரி. இந்த குரு பெயர்ச்சியிலே சாதகமான பலன்களே இல்லையா? என்று கேட்டால் இருக்கிறது. பத்தாம் இடத்திலேயே குரு பகவான் வருகிறார் அப்படி வரும்போது அவர் உங்களுடைய ராசிக்கு 2, 4, 6 ஆம் இடங்களை பார்வையிடுகிறார். அதனால் உங்களுடைய உழைப்பு உத்தியோகம் இந்த வகையிலே உங்களுக்கு பொருள் வந்து சேரும். மனை வீடு வண்டி வாகனம் சம்பந்தமாக, இவற்றை செலவுசெய்து புதுப்பித்துக் கொள்ள முடியும். இருக்கின்ற இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடியேறி அதன் மூலமாக கொஞ்சம் நல்ல நிலையை அடைய முடியும்.
நீண்ட காலமாக தீராத கடன் பிரச்சனை, உடல் உபாதை, எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைக்கான தீர்வு உங்களுக்கு தெரியவரும். நற்காரியங்களுக்கு கடன் தேவை என்றால் அது கிடைக்கும். நல்ல கல்வி திறமை அனுபவம் இருக்கக்கூடியவர்கள் சரியான உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஈடுபாட்டோடு, விருப்பத்தோடு பணிபுரியக் கூடியவர்கள் உத்தியோக ரீதியாக உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
இதுநாள் வரை உங்களுக்கு, உங்களுடைய துறையிலேயே நல்ல பெயர் கிடைக்கவில்லை, உங்களுடைய உழைப்பிற்கு உண்டான பலனை நீங்கள் பெறவில்லை என்ற ஒரு நிலை இப்போது சரியாகும். உங்களுடைய தகுதி திறமை உழைப்பிற்கு உண்டான அளவிற்கு நல்ல பெயரை நீங்கள், உங்களுடைய உத்தியோக ரீதியாக எடுக்க முடியும்.
பல காலமாக செய்யமுடியாத உங்களுடைய பிள்ளைகளுடைய திருமணம் கைகூடுவது, அவர்களின் உயர்கல்வி கனவு பலிப்பது சாத்தியமாகும். உங்களுடைய பெற்றோருக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளான, அவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவது, ஆன்மிக ஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்வது இப்படியானவற்றை செய்ய முடியும்.
இந்த காலத்திலே, உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். அதனால் உங்களுடைய தந்தை ஆசிரியர் உயரதிகாரி முதலாளி உங்களுடைய குரு இவர்களிடத்தில் எப்போதும் அறிவுரை கேட்பது, ஆசி பெறுவது, அதன்பிறகு நீங்கள் முடிவுகளை எடுப்பது, செயல்களை செய்வதன் மூலமாக பலன் கிடைக்கும்.
ராசியில் ராகுவும் 7-ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். அதனால் பிறரிடத்தில் இந்த காலகட்டங்களில் சண்டை சச்சரவு பகை விரோதம் வம்பு வழக்கை கட்டாயம் தவிர்க்கவேண்டும். சக்திக்கு மீறிய விஷயங்களிலேயே ஆசைப்படக்கூடாது. அப்படி ஆசை இருந்தால் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களோ, பேராசையோ ஏற்படும் போது, கட்டாயம் அவற்றை தவிர்க்க வேண்டும். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடிய சமயத்திலே, மனத்தெளிவு கிடைக்க தியானம் செய்வது, ஆலய வழிபாடு செய்வது நல்லது. மணமானவர்கள் வாழ்க்கை துணையிடத்தில் இந்த காலகட்டத்திலே அனுசரித்துப் போக வேண்டியது மிக அவசியமான ஒன்று.
இந்த காலக்கட்டத்திலே தினந்தோறும் ஆலய வழிபாடு செய்வது மிகச்சிறந்த பலன் தரக்கூடியதாக இருக்கும். அதிலும் மஹாலக்ஷ்மி ஆண்டாள் தாயார் பார்வதி தேவி துர்க்கை காளி இப்படியாக பெண் தெய்வ வழிபாடு மிகச் சிறந்த பலனை உங்களுக்கு தரும்.
கீழ்க்கண்ட காணொளியில் கும்பத்திற்கு வரக்கூடிய குருபகவான் தரக்கூடிய பலன்கள் பரிகாரங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்கிறோம். அதையும் நீங்கள் தெரிந்து கொண்டு பலன் பெறுங்கள்.
மிதுன ராசியில் இருந்து, மீன ராசி வரை உண்டான குரு பெயர்ச்சி பலன்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
ஜாதகம் திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரக ஹோமம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply