விநாயக சதுர்த்தியை எப்படி கொண்டாடுவது ? பிள்ளையார் சதுர்த்தி பூஜை வழிபாட்டு முறை என்ன ? அவசியம் செய்ய வேண்டியது என்னென்ன? இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
DO’S OF VINAYAGA CHATHURTHI :
விநாயக சதுர்த்தி முன்னேற்பாடுகள் – பிள்ளையார் சதுர்த்திக்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வீடுவாசல் பூஜையறையை சுத்தம் செய்து பண்டிகைக்கு வீட்டை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். பிள்ளையார் பூஜைக்கான மண்டபத்தை (இடத்தை) சுத்தி செய்யவேண்டும். தலைவாசல், பூஜையறைக்கு மாவிலை தோரணங்கள் கட்டவேண்டும். தலைவாசல், வரவேற்பறை, பூஜையறையை மஞ்சள் குங்குமமிட்டு மாக்கோலமிட்டு அலங்கரிக்கவேண்டும்.பண்டிகையன்று பிள்ளையாரை வாங்கிவர முடியாதவரோ, வீட்டு வழக்கப்படியோ முன்னாள் மாலை வாங்கிவரலாம். ஏனையவர் விநாயக சதுர்த்தி அன்று பூஜைக்காக சுத்தபத்தமாக வைத்திருக்கக்கூடிய மனையை கொண்டுசென்று பிள்ளையாரை வாங்கிவர வேண்டும்.
பூஜை ஆரம்பம் – மண்டபத்திலே வாழையிலையை கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ போட்டு பச்சரிசி நிரப்பி மனையிலிருக்கும் பிள்ளையாரை அவ்வரிசியிலே வைக்கவேண்டும். வாழையிலையிலே கலசம் வைத்து பிள்ளையாரை மனையிலேயே வைத்தும் பூஜிப்பர். பிள்ளையாருக்கு குடை வைத்து வஸ்திரம் சாற்றி நாபியிலே நாணயம் வைத்து அருகம்புல் எருக்கம்பூ மாலை போட்டு இயன்ற அலங்காரங்களை செய்யவேண்டும்.
பிள்ளையார் சதுர்த்தி பிரசாதங்கள் – மடியாக சுத்தபத்தமாக மோதகம்/கொழுக்கட்டை (தேங்காய் பூர்ண கொழுக்கட்டை,எள்ளு பூர்ண கொழுக்கட்டை, உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை, கடலை பருப்பு கொழுக்கட்டை) அப்பம் சர்க்கரைப் பொங்கல் லட்டு அதிரசம் வடை பாயசம் சுண்டல் கலந்தசாதம்/சித்ரான்னங்கள்… இத்யாதிகளையோ வீட்டு வழக்கப்படியோ நைவேத்யம் செய்ய பிரசாதங்களை செய்துகொள்ள வேண்டும்.
பத்ரம் புஷ்பம் பழங்கள் – 21 வகையான பத்ரங்களையும் புஷ்பங்களையும் தயார்செய்துகொள்ள வேண்டும். மா பலா வாழை கொய்யா திராட்சை சாத்துக்குடி அன்னாசி மாதுளை ஆப்பிள் சப்போட்டா நாவல்பழம் விளாம்பழம் பேரிக்காய் கரும்பு அவல் பொறி கடலை நாட்டு சர்க்கரை வெல்லம் முந்திரி பாதாம் திராட்சை கொப்பரை தேன் நெய் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் எலுமிச்சை ……. இத்யாதிகளை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
பூஜை – விநாயகருக்கே பூஜை செய்யப்போகிறோம் என்றாலும் முதலில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்துவைத்து பூஜைசெய்ய வேண்டும். புரோஹிதர் மூலமாகவோ தங்களுக்கு தெரிந்த முறையிலோ பூஜை செய்து தரமாக தயாரித்த பக்ஷணங்கள் பலகாரங்கள் பழவகைகளை நைவேத்யம் செய்து தூப தீப ஆராதனை செய்யவேண்டும்.
கணபதி ஹோமம் – இந்நாளிலே கணபதி ஹோமம் செய்யக்கிடைப்பது பெரும்பேறு. வசதி வாய்ப்பு இருக்கும் பாக்கியவான்கள் கணபதி ஹோமம் செய்து (அப்பேற்றைப்பெற்று) லோகக்ஷேமத்திற்காக பிரார்த்திக்கலாம்.
முக்கிய அம்சம் – விநாயகப் பெருமானை பூஜித்து பிரார்த்தித்து அவனருள் பெறுகின்ற இந்நாளிலே பெற்றோர் பெரியோரிடத்திலும் ஆசி பெறவேண்டியது அவசியம். பிறகு
பிரசாத விநியோகம் – பிரசாதங்களை குழந்தைகளுக்கு கொடுத்து நாமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நந்நாளிலே (எந்நாளிளும்) யாரும் பசி பட்டினியோடு இருக்கக்கூடாது. விநாயகரின் பிரசாதங்களை அன்னதானமாக அளித்தல் மிக விசேஷம்.
சிறப்பு – அன்று, எத்தனை கணபதியை பார்க்கிறோமோ அத்தனை புண்ணியம், அத்தனை பலன் கிடைக்கும் என்பது வினாயக சதுர்த்தி பண்டிகையின் பல விசேஷங்களிலே ஒரு விசேஷம்.
விநாயக சதுர்த்தி மாலை வழிபாடு – அன்று மாலை விளக்கேற்றி கணபதியை பூஜித்து சுண்டலையோ இயன்றதையோ நைவேத்யம் செய்து பாடல்களை பாடி ஆனைமுகனுக்கு ஆரத்தி எடுக்கவேண்டும்.
புனர்பூஜை – மறுநாள் காலை கஜமுகனுக்கு பூஜை (புனர்பூஜை) செய்து மஹா அன்னம்/சுத்தான்னம் நைவேத்யம் செய்து கற்பூர ஹாரத்தி காண்பிக்க வேண்டும்.
விஸர்ஜனம் – அன்றோ,மூன்று ஐந்து ஏழு ஒன்பதாவது நாளோ அவரவரின் வசதிப்படி களிமண் பிள்ளையாரை நீரிலே சேர்க்கலாம். ஓடுகின்ற ஜலத்திலே விடுவது/கரைப்பது உத்தமமான முதல்தர வழி. அப்படி செய்யும்போது பூஜித்த பத்ரம் புஷ்பங்களையும் (நிர்மால்யம்) சேர்த்து விடலாம். ஆனால் அதுவரை தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி இயன்ற பூஜை பாடல் பஜனைகளை செய்து சக்திக்கேற்ற நைவேத்யம் படைக்கவேண்டும்.
விநாயக சதுர்த்தி வழிபாட்டிலே செய்ய வேண்டியது என்னென்ன? என்பதை இப்பதிவிலே அறிந்து கொண்டோம். கட்டாயம் செய்யவே கூடாத, தவிர்க்க வேண்டியவை எவையெவை? என்பதை அடுத்த பதிவிலே அறிந்து கொள்வோம் .
கணபதி ஹோமம் திருமணம் கிரஹபிரவேஸம் செய்து வைக்க , ஜோதிடம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, பிள்ளையார் சதுர்த்தி பூஜை செய்து வைக்க அணுகவும் .
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply