பரிகாரம் பலன்தரலையா? பரிகாரம்-கேள்வி பதில்கள்

city people water street

போகாத கோவிலில்லை, வேண்டாத தெய்வமில்லை, செய்யாத பரிகாரமில்லை ஆனால் பிரார்த்தனை நிறைவேறவில்லை, வேண்டுதல் கைகூடவில்லை, கஷ்டம் முடியவில்லை, காரியம் நடக்கவில்லை, பரிகாரங்கள் பொய்யா? பிராயச்சித்தங்கள் பித்தலாட்டமா?

கடன் நோய் பகை வழக்கிலிருந்து விடுபட விமோசனமே கிடையாதா? திருமணம் நடக்க, புத்திரப்பேறு கிடைக்க, மனை வீடு அமைய உபாயமே இல்லையா? இராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரம் விடாதா? காசிக்கே போனாலும் கர்மம் தொலையாதா?

இப்படியான பெரும்பாலானவர்களுடைய கேள்வி கவலை ஆதங்கத்திற்குண்டான பதிலையும் விளக்கத்தையும் , பலன்தரக்கூடிய பரிகாரங்கள் எவை? அவற்றை எப்படி செய்வது? என்பதையும் இப்பதிவிலே பார்ப்போம்.

தோஷம் என்பது நோயை போன்றது. பரிகாரம் என்பது வைத்தியம் போன்றது. வைத்தியத்தில் கை வைத்தியம் வீட்டு வைத்தியம் பாட்டி வைத்தியம், சித்தா ஆயுர்வேதா யுனானி அலோபதி என நிறைய மருத்துவ முறைகள் இருப்பதுபோல, பரிகாரங்களில் நிறைய வகைகள் இருக்கின்றது.

ஏராளமான மருந்து மாத்திரை ஊசி கஷாயம் லேகியம் சூரணம் பத்தியம் ரணசிகிச்சை இருந்தாலும் யாருக்கு எது பொருந்தும், சரியான அளவு எவ்வளவு என்பதை, வயது உடல்நிலை பலம் பலவீனம் ஒவ்வாமை மற்றைய நோய்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து அறிந்து பயனடைய வேண்டும்.

அதுபோல தோஷங்களில் எவ்வளவோ வகைகள் இருக்கிறது. அதற்கான பரிகாரமும் பலவகையாக இருக்கிறது. யாருக்கு எப்படிப்பட்ட பரிகாரங்கள் பலன்தரும் என்பதை ஜாதகரீதியாக ஆராய்ந்து அறிந்து செய்யவேண்டும். இது முதலாவது மற்றும் முக்கியமானதான விஷயம். இரண்டாவது,

பரிகாரங்களை யார் செய்யவேண்டும்? ஜாதகரே செய்துகொள்ள வேண்டுமா? அவரின் பெற்றோர் செய்யலாமா? திருமணமாகியர் எனில் வாழ்க்கைத்துணை செய்யலாமா? பிள்ளைகளோ, உடன்பிறந்தவரோ, உறவினரோ, நண்பர்களோ செய்யலாமா? இதில் சிறந்தது எது? என்பதை ஜோதிடரிடம் கேட்டறிந்து பின்பற்ற வேண்டும். மூன்றாவது,

பரிகாரங்களை எப்படி செய்யவேண்டும்? பரிகார செய்முறை, பரிகாரத்திற்கு முன்னும் பின்னும் விரதம் உபவாசம் போன்ற ஆகார நியமம், தாம்பத்தியம், சுப அசுப தீட்டு, தானம், தர்மம், போன்றவற்றில் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை, கட்டாயம் தவிர்க்க வேண்டியவை, இப்படியான விதிமுறைகளை முடிந்த அளவிற்கு முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும். நான்காவதாக,

பரிகாரங்களை எங்கே செய்யவேண்டும்? சில பரிகாரங்களை இல்லத்திலே செய்துகொள்ள வேண்டும். சிலவற்றை கோவிலிலே செய்து கொள்ளலாம். சில பரிகாரங்களை புண்ய தீர்த்தங்களில், சமுத்திரக்கரையில் செய்யவேண்டும். மேலும் சில பரிகாரங்களை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே செய்யவேண்டும். ஐந்தாவதாக,

பரிகாரங்களை என்றைக்கு செய்யவேண்டும்? நாள் செய்வதை நல்லோர் கூட செய்யமுடியாது. என்ற பழமொழிக்கு ஏற்றார்போல , பரிகாரம் செய்வதற்கு ஜெனனஜாதக தோஷம், பரிகாரம் இவற்றிற்கு ஏற்றவாறு, ஜென்ம நக்க்ஷத்ரம் ஜென்ம ராசிக்கு பொருந்துமாறு சிறந்த நாளை தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கியம்.

பரிகாரங்களை எந்நேரத்தில் செய்யவேண்டும்? சுபகாரியங்களுக்கு முஹூர்த்த லக்னம் தேர்ந்தெடுப்பது போல, ஒவ்வொரு பரிகாரத்திற்கும், அதற்கேற்ற நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது கட்டாயம்.

மேற்சொன்னவற்றை அறிந்துகொண்டு ஆத்மார்த்தமாக செய்தால் கட்டாயம் பரிகாரங்கள் பலன்தரும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பரிகாரம் என்பது எல்லோருக்கும் ஒரே விதமாக சொல்லப்படவில்லை.

இந்த இடத்திலே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பரிகாரம் இருக்கிறதா? எல்லோருக்கும் ஒரே விதமான பரிகாரம் பலன் தராதென்றால் வித்தியாசப்படுத்துவது எது? என்ற கேள்விகள் எழுகிறதல்லவா? பதிலை சிந்திப்போமா.

வித்தியாசப்படுத்தும் காரணிகள் பல இருந்தாலும் தேகபலம், பொருளாதார நிலை பிராதானமாக இருக்கிறது. ஆரோக்கியம், பொருளாதார வசதிக்கு ஏற்றவாறு பரிகார சடங்குகளை செய்தால் போதும். இந்த இடத்திலே கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், எளியவர், வறியவர் நீரையோ இலையையோ காயையோ கனியையோ கொடுத்தாலும் பகவான் ஏற்றுக்கொள்வதுபோல பரிகாரத்திற்கும் ஏர்வையாகிறது. ஆனால்,

வலிமை மிக்கவர், வசதி படைத்தவர், அந்தஸ்து அதிகாரம் பெயர் புகழ் பெற்றவர், தன்னுடைய நிலைக்கு, சக்திக்கு ஏற்றவாறு பரிகாரம் தானம் தர்மம் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் பலன்தரும், இது நிச்சயம். இப்படியாக உரைக்கும்போது, இவ்விஷயத்தை உணர்த்தும்போது சிலர் ஏற்றுக்கொள்ளலாம். சிலர்,

ஓஹோ, இவர், இருப்பவரிடத்திலே வசூல் செய்ய நினைக்கிறார், என்பதாக எண்ணக்கூடும். இவ்வெண்ணத்தினால் நஷ்டமடையப்போவது, அதாவது பரிகாரத்தின் பலனை அடையாமல் போகப்போவது, தவறாக புரிந்து கொள்ளக்கூடியவரே. ஆகையால் இதைப்பற்றிய விளக்கத்தையும் பார்ப்போம்.

முன்னோர்க்கான பித்ரு காரியங்களிலே ஸ்ரார்த்தம் என்றால், அதை ஸ்ரத்தையாக முறைப்படி ஹோமம், போஜனம்,வஸ்திரம், தக்ஷிணை, தானம் இத்யாதிகளோடு செய்யவேண்டும். வசதி வாய்ப்பு இல்லையா? ஹிரண்ய ஸ்ரார்த்தமாக செய்யலாம். அதற்கும் வசதியில்லையா? அதுவும் முடியவில்லையா? தர்ப்பணமாவது விடவேண்டும். கடைசி பட்சம் உபவாசமாவது இருக்கலாம். பசுவிற்கு ஆகாரம் கொடுக்கலாம். ஆனால் வசதி வாய்ப்பு இருப்பவர் கடைசி வழியை,எளிய வழியை கடைபிடித்தால் பலன்கிடையாது. பாவம் தோஷம் ஏற்படும்.

தச தானங்கள் கொடுக்கவேண்டிய இடத்திலே கோதானம், பூதானம் இத்யாதிகளுக்கு மாற்றாக சக்திக்கேற்ற தக்ஷினாதிகளை கொடுத்தால் போதுமானது. இந்த விதிவிலக்கானது , மாற்று வழியானது தானம் கொடுக்கும் சக்தியற்றவர்க்கே. வசதி படைத்தவர்க்கல்ல.

அதாவது பொன் வைக்குமிடத்திலே பூ வைக்கலாம் என்பது இல்லாதோருக்கே அன்றி இருபவருக்கில்லை.

யதாசக்தி ஸ்நானம், யதாசக்தி தக்ஷிணை, யதாசக்தி ஹிரண்யம் என்பதாக, சக்திக்கேற்ப செய்ய வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே, உடலுபாதை தனிமை பயம் கவலை நிம்மதியின்மை மன திருப்தியின்மை மன அமைதியின்மை தூக்கமின்மை மரணபயம் மனநோய், எல்லாமிருந்தும் அனுபவிக்க முடியாமை, பகை வழக்கிலிருந்து விடுபட, திருமணம் நடக்க, தம்பதியர் (கணவன்/மனைவி) சேர்ந்திருக்க புத்திரப்பேறு கிடைக்க, வசதிபடைத்த லக்க்ஷாதிபதிகள், கோடீஸ்வரர்கள், தனவான்கள், செல்வந்தர்கள் ….. தங்களுடைய வசதி வாய்ப்புக்கு தகுந்தவாறு செய்யும் பரிகாரங்களை நிறைவாக, திருப்தியாக, தாராளமாக, முறைப்படி, முழுமையாக செய்தால்… முழுமையான பலன்களை தகுந்த காலத்திலேயே பெறமுடியும். இது உறுதி .

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

2 responses to “பரிகாரம் பலன்தரலையா? பரிகாரம்-கேள்வி பதில்கள்”

  1. […] சிவப்பு வஸ்திரங்கள் இவற்றில் சக்திக்கேற்றதை தானம் […]

  2. […] பரிகாரம் பலன்தரலையா? பரிகாரம்-கேள்வி… என்ற தலைப்பிலே கடந்த பதிவில் பரிகாரங்கள் பலன்தர பல வழிகளை பார்த்தோம். […]

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading