ஆந்தையோ வௌவாலோ வீட்டிற்கு உள்ளே வந்து விட்டால் அது தோஷமா? அதற்கு பரிகாரம் என்ன?
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் நம்மை படைத்த அதே கடவுள் தான் படைத்தார். மேலும் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்.அப்படி இருக்க, குறிப்பிட்ட சில பறவை இனங்கள் சில விலங்கினங்கள் இவையெல்லாம் வீட்டிற்கு உள்ளே வரக்கூடாது என்று ஏன் பெரியவர்கள் சொன்னார்கள்!
கட்டாயம் அவர்கள் காரணமில்லாமல் சொல்லவில்லை. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு விதமான கிரஹிப்புத்தன்மை இருக்கிறது. ஒவ்வொரு விதமான வெளிவிடும் தன்மை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மையிலே வசிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு, சில பறவைகள் சில விலங்கினங்கள் நம் வீட்டிற்கு உள்ளே வரக்கூடாது. வந்தால் தோஷம். அதற்கு சில ப்ராயச்சித்தங்களை செய்ய வேண்டும். என்பதாக நமக்கு நம்முடைய முன்னோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதில் பறவைகள் சம்பந்தமாக அதிலும் ஆந்தை வௌவால் இவை நம்முடைய வீட்டிற்கு உள்ளே வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நாம் பார்ப்போம்.
ஆந்தை வௌவால் வீட்டுக்குள்ளே வந்துவிட்டால் அது எந்த மாதிரியான தோஷம்? எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? என்பதை சொல்லி உங்களை அச்சுறுத்துவது நம்முடைய நோக்கம் கிடையாது. அப்படி நீங்கள் கவலை கொள்ளும்படியாக, பயப்படும்படியாக இப்போது நாம் எதுவும் சொல்லப் போவதில்லை.
நம்முடைய வீட்டிற்குள்ளே ஆந்தையோ வௌவாலோ வந்துவிட்டது என்றால், அது ஊனமாகா வண்ணம், அதற்கு பாதிப்பு ஏற்படாதவாறு, அந்த பறவையானது இறந்து போகாதவாறு கவனமாக அதை நாம் நம்முடைய வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
அப்படி வெளியேற்றிய பிறகு, கடல் தீர்த்தம் கங்கா தீர்த்தம் குளம் கிணறு நதி தீர்த்தம் கோமியம் மஞ்சள் தூள் இவற்றை ஒரு கலசத்தில் நிரப்பி, மாவிலை கொத்து வைத்து, பூஜை அறையிலே அந்த கலசத்தை வைத்து, குடும்பத்திற்கு குடும்ப நபர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதாக குல தெய்வத்தையும், அனுதினமும் பூஜிக்கின்ற தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அந்த கலசத்தில் உள்ள தீர்த்தத்தை மாவிலை கொண்டு வீடு முழுக்க தெளித்து விட்டு, வீட்டிற்கு வெளியேயும் தெளித்து விட வேண்டும்.
அதன் பிறகு உங்களுடைய வீட்டிற்கு அருகில் பெருமாள் கோவில் இருந்தால் கருடாழ்வார் சன்னதி அல்லது சிவாலயம் இருந்தால் சரபேஸ்வரர் சன்னதியில் விளக்கு ஏற்றுவது அபிஷேக ஆராதனைகள் செய்வது இவையே எளிய பரிகாரம்.
இதை செய்து விட்டால் அந்த தோஷமானது அகன்றுவிடும். ஆனால் தொடர்ந்து இதுபோன்று ஆந்தை அல்லது வௌவால் வீட்டிற்கு உள்ளே வந்து கொண்டே இருக்கிறது என்றால், வாஸ்து சாஸ்திர படி உங்களுடைய வீடு சரியாக இருக்கிறதா? என்பதை நீங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத் தலைவர் தலைவி இருவருடைய ஜாதகத்தை பார்க்க வேண்டும். இப்படியாக செய்து நீங்கள் நல்வாழ்வு வாழ வேண்டும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, கணபதி லக்ஷ்மி நவகிரஹ ஹோமம் வாஸ்து பூஜை செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply