செவ்வாய் தோஷம் வாஸ்து தோஷம் மற்றும் அனைத்து விக்கினங்களும் அகன்று நினைத்தெல்லாம் நடக்க வேண்டியதெல்லாம் கிடைக்க ஆடி செவ்வாய் சங்கடஹர சதுர்த்தி நந்நாளின் மகிமையையும் வழிபாடு செய்ய வேண்டிய முறையையும் பார்ப்போம்.
ஆடி செவ்வாய் – செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்பர். செவ்வாய்க்கு மங்களன் என்ற பெயரும் உண்டு.காலபுருஷ தத்துவத்தின் தலையாக விளங்கும் மேஷராசிக்கும் ஆயுள் ஸ்தானமாக விளங்கும் விருச்சிக ராசிக்கும் செவ்வாய் அதிபதி. மனையோகம் க்ரஹயோகம் தரக்கூடியவரும் இவரே. ஆண்களுக்கு சுக்ரன் களத்திரகாரகன் பெண்களுக்கு செவ்வாய் களத்திரகாரகன் என்ற கூற்றும் உண்டு. வீரத்தையும் வீர்யத்தையும் தரக்கூடியவர் இவர். சகோதர ஒற்றுமையை தரக்கூடியவராகவும் உள்ளார். இவ்வளவு மகத்தான பலன்களை தரக்கூடிய செவ்வாய் சுயஜாதகத்திலே பலமிழந்துபோய் இருந்தால் செவ்வாய் தோஷமிருந்தால் ஆடிமாத செவ்வாயக்கிழமைகளில் விரதமிருக்க நம்முடைய தோஷங்களை நீக்கி யோகங்களை நமக்கு அருள்வார். https://youtu.be/izxpPd5XCb4
சங்கடஹர சதுர்ததி – ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரக்கூடிய சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி. இந்நாளிலே விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபட ஜென்ம ஜாதகத்திலே சந்திரன் பலமிழந்து மனரீதியாக உடல்ரீதியாக பிரச்சனைக்குள்ளானவர்க்கு விமோசனம் பிறக்கும்.
கேது தோஷம் கேது தசை கோசார கேதுவுடைய சாதகமற்ற சஞ்சாரத்தால் விரக்தி வெறுப்பு தனிமை எதிர்மறை எண்ணங்கள் எதிலும் திருப்தியின்மை எல்லாவற்றிலும் தடை தாமதம் வியாதி இப்படிப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் இந்நாளிளே விரதமோ தானமோ தர்மமோ பூஜையோ செய்ய அனைத்து தோஷங்களும் நீங்கி அற்புதமான வாழ்வு கிட்டும்.
செவ்வாய் (அங்காரகன்)விநாயகப்பெருமானை பூஜித்தே கிரஹபதவி பெற்றார். செவ்வாய்க்கிழமையிலே வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விரதமானது செவ்வாய் தோஷத்தையும் போக்கி மங்கள வாழ்வை தரவல்லது. அதிலும் ஆடிமாத செவ்வாய் அன்று வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியானது விநாயகப்பெருமானோடு அம்பிகையின் அருளுக்கும் நம்மை பாத்திரமாக்கக்கூடியது.
ஆடி செவ்வாய் சங்கடஹர சதுர்த்தி விரதமுறை – ஆடி 11 , 27.07.2021 செவ்வாய் அதிகாலையிலே துயிலெழுந்து தலைக்கு குளிக்கவேண்டும். தாய்மார்கள் மஞ்சள்பூசி குளிக்க வேண்டும். ஆடி செவ்வாய் தேடிக்குளி என்றே சிறப்பித்து சொல்லி இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வது இன்னுமும் சிறப்பு. வீட்டிலே விளக்கேற்றி நித்யபடி பூஜை நைவேத்யம் செய்ய வேண்டும். அடுத்து சிவாலயம் சென்று கணபதி முருகன் பார்வதி பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் விசேஷ அலங்காரம் நைவேத்யம் அர்ச்சனை இவற்றுள் சக்திக்கேற்றதை செய்யவேண்டும். அடுத்து ஸ்தல வ்ருக்க்ஷம் , வ்ருக்க்ஷத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கணபதி நாகர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும். பின்னர் நவகிரஹ சன்னதியிலே அங்காரகனையும் அனைத்து கிரஹங்களையும் வழிபட வேண்டும்.
குறிப்பாக இல்லாதோர்க்கும் எளியோர்க்கும் தர்மம் செய்வது, சக்திக்கேற்றவாறு அந்தணர்க்கு தானம் அளிப்பது விசேஷம். இவற்றை ஆத்மார்த்தமாக நம்பிக்கையோடு செய்ய திருமணம் கைகூடும். தம்பதியர்க்கு புத்திரப்பேறு கிட்டும். நோயுற்றவர்க்கு வியாதி குணமாகி ஆரோக்கியம் கிடைக்கும். சசோதர வழி நல்லுறவு ஏற்படும். வழக்கு கடன் பிரச்சனைகள் தீரும். மங்களம் உண்டாகும்.
வாஸ்து நாளாகவும் இந்நாள் அமைந்திருக்கிறது – தங்களது மனை வீடு கடை அலுவலகம் தொழிற்சாலையிலே இருக்கின்ற வாஸ்து குறைகளை வாஸ்து நிபணர் மூலமாக கண்டறிந்து அவற்றை சரிசெய்து வளமான வாழ்க்கையை பெற வாஸ்து பகவானையும் பூமிகாரகன் அங்காரகனையும் இந்நாளில் பூஜித்து ப்ரார்த்திப்போம்.
சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் ( வில்வாரண்ய க்க்ஷேத்ரம் ) ஆடி செவ்வாய் கோவில் என்று சிறப்பித்து சொல்லப்படுகிறது. அருகாமையில் இருப்பவர்கள் தரிசித்து பாக்கியவான்களாக ஆகுங்கள்.
பீமராஜா ஐயர் – விக்னேஷ் ஜோதிட நிலையம்.
Leave a Reply